Soma Valliappan
பணத்தை பெருக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அவற்றில் பங்குச் சந்தையில் செய்யப்படும் முதலீடும் ஒன்று. இதற்கு முதலாவதாகத் தேவைப்படுவது பணம் என்கிற 'முதல்'. வெறும் கையால் இங்கே முழம் போட முடியாது.
பணம் தவிர, பங்குச்சந்தையில் பங்கு பெற, சம்பாதிக்க, வேறு இரண்டு முக்கிய தேவைகளும் உள்ளன. ஒன்று பங்குச்சந்தை பற்றிய தகவல். என்ன? எது? எவ்வளவு? போன்ற விவரங்கள்.
மற்றொன்று சரியான முடிவுகள் எடுக்கும் திறன், கூடவே சரியான முடிவுகள் எடுப்பதற்கு உதவும் பதறாத, பயப்படாத, பேராசைப்படாத மனமும்.
பணமும் முடிவெடுக்கும் திறனும் அவரவரே சமாளிக்க வேண்டியவை. விவரம் தெரிந்து கொள்வதற்குத்தான் உதவி தேவைப்படும். அதைச் செய்வதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம்.
பங்குச்சந்தை என்பதே எல்லோராலும் புரிந்து கொண்டு விட முடியாத ஒரு புதிர் என்கிற நிலை தற்சமயம் மாறிவிட்டது. பலருக்கும் இப்போது பங்குச்சந்தை என்றால் என்ன, அங்கே என்ன நடக்கிறது, அதில் நாமும் எப்படிப் பங்கு பெறலாம் என்பன தெரிந்துவிட்டன (அள்ள அள்ளப் பணம்-1), கணிசமானவர்கள் பங்கெடுக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.
அடுத்து, 'அங்கே வல்லுனர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களின் அணுகுமுறை என்ன? அவர்கள் பயன்படுத்தும் வழி முறைகள் (ஃபண்டமெண்டல் அனாலிசிஸ், டெக்னிக்கல் அனாலிசிஸ்) எவை?' போன்றவை பற்றியும் ஓரளவு தெரிந்து கொண்டாகிவிட்டது (அள்ள அள்ளப் பணம்-2).
'அடுத்து? இன்னும் என்ன என்னவெல்லாம் அங்கே நடக்கின்றன? அவற்றைப் பற்றியும் தெரிந்தாக வேண்டும்' என்று கேட்கிற வாசகர்களுக்கான புத்தகம்தான் இது. 'அள்ள அள்ளப் பணம்' வரிசையில் மூன்றாம் பாகம்.
அதே பங்குச்சந்தைதான். முன் பார்த்த அதே அணுகுமுறைகள் தான். ஆனால், வாங்கி விற்கும் பொருள் புதிது. முறைகள் புதிது. அதனால் தேவைப்படும் திறன்களும் புதிது.
பங்குச்சந்தையில்தான் எத்தனை வகையான பொருள்கள் (Products) இருக்கின்றன செய்யும் முறைகளிலும்தான் எவ்வளவு விதங்கள் இருக்கின்றன!
பெரும்பாலானவர்களுக்கு பங்குச்சந்தை என்பது, பங்குகளைப் பணம் கொடுத்து, வாங்கி வைத்திருந்து, லாபம் பார்த்து விற்பது. அவ்வளவுதான். இவையெல்லாம் Cash Market Transactions மற்றும் Delivery Based Transactions என்று அழைக்கப்படுகின்றன.
ஆனால் பங்குச்சந்தையில் இவற்றைத் தவிரவும் இன்னும் பல மாயாஜாலாங்கள் இருக்கின்றன. F&O என்று அழைக்கப்படும் இரட்டையர்கள். ஃபியூச்சர்ஸ் என்று ஒரு பொருள் (Product). ஆப்ஷன் என்று மற்றொரு பொருள் (Product).
இவற்றின் குணங்கள், இவற்றைச் செய்வதற்கான வழிமுறைகள், சாதாரணப் பங்குகளை வாங்கி விற்பதிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. இவை தரும் வாய்ப்புகளும் அனுபவங்களும் வித்தியாசமானவை.
F&O-வில் (கேஷ் மார்க்கெட் போன்றே) நாம் நினைக்கும் நிறுவனங்களின் பங்குகளை வாங்கலாம், விற்கலாம். அது மட்டுமல்ல. இப்படித் தனிப்பட்ட நிறுவனப் பங்குகளைத்தான் வாங்க வேண்டும், விற்க வேண்டும் என்பதில்லை.
பலவகைப் பழங்களும் கலந்திருக்கும் ஃபுரூட் சாலட் போல, பல பங்குகளையும் தன்னகத்தே கொண்ட பங்குச்சந்தைக் குறியீட்டையே - அதாவது, Nifty Sensex குறியீட்டு எண்களையே - மக்கள் வாங்கி விற்கட்டுமே என்று யோசித்து, அவற்றையும், எவரும் வாங்கி, விற்கக்கூடிய ஒரு பொருளாக (Trading Product) ஆக்கி வைத்திருக்கிறார்கள். அவைதான் Index Futures & Options.
இவையெல்லாம் போக, ETF எனப்படும் 'எக்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்ஸ்' என்று மற்றொரு வாங்கி விற்கக்கூடிய சுவாரஸ்யமான பொருளும் (Product) பங்குச்சந்தையில் இருக்கிறது.
புதியதாக, சிலவற்றைத் தெரிந்து கொண்டால், அவற்றைக் கட்டாயம் செய்ய வேண்டும் என்றோ, பழையதை (கேஷ் மார்க்கெட்டை) விட்டுவிட வேண்டும் என்றோ யோசிக்காதீர்கள்.
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பயன் இருக்கிறது. ஒன்று கார் என்றால், மற்றொன்று லாரி, இன்னொன்று டிராக்டர். நம் தேவையைப் பொறுத்து அவற்றைப் பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம்.
எவை எவை, எப்படியெல்லாம் வேலை செய்யும் என்பதை இந்தப் புத்தகம் விளக்கும். எதை, எங்கே, எப்படிப் பயன்படுத்துவது என்பது வழக்கம் போல உங்கள் முடிவுதான். உங்களது முடிவு மட்டும் தான்.
அள்ள அள்ளப் பணம் - 3 என்கிற இந்த அடுத்த கட்டப் புத்தகம் ஃபியூச்சர்ஸ், ஆப்ஷன்ஸ், இண்டெக்ஸ் ஃபியூச்சர்ஸ், ஆப்ஷன்ஸ், மற்றும் ETF கோல்ட் பீஸ் போன்ற பல புதிய பணம் செய்யும் முறைகளை அறிமுகப்படுத்துகிறது, விளக்குகிறது.
சாமர்த்தியமாகப் பயன்படுத்தி வெற்றி பெற, நிறைய செல்வம் சேர்க்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.
- சோம. வள்ளியப்பன்
S Valliyappan ( Known as Soma Valliappan) is a renowned writer, author, speaker, trainer, and an expert in the areas of Human Resource Management, Personality development, and Financial Investments. He has written over 50 books in Tamil and English on various subjects including Self Development,, Stock market, Emotional Intelligence, Time management, Sales, Leadership, and Personality development. Known for his erudite writing style, his articles and columns are widely published in leading Tamil newspapers and periodicals regularly. His book on Stock investing, titled Alla Alla Panam, released in 2004 by Kizhakku Publishers (New Horizon Media), has been a phenomenal success and has sold over 1,25,000 copies. Valliyappan is regularly invited by many Tamil Television channels for his opinions on stock market and economic events.
He is a Graduate in Economics from Madras University and Post Graduate in Business Administration with human resource and Marketing specializations. Valliyappan has undergone a comprehensive educational program on Emotional intelligence at XLRI , a premier Business Management Institute Jamshedpur, India.