Kalachakram Narasimha
இது ஒரு விந்தைதான். கடந்த 43 நாட்களாக முகநூல் நண்பர்களுடன், வாசகர்களுடன் மட்டுமே உறவாடிக்கொண்டிருக்கிறேன். பிற்பகல் துவங்கி இரவு ஏழு மணி வரையில் அலுவலக பணிகள் செய்தாலும், எனது புதினங்களை எழுதும் பணிகளை அப்பால் ஒதுக்கிவிட்டு, முகநூலில் தொடர்களை எழுதிக்கொண்டிருக்கிறேன். அலைபேசி மூலமாக, மெஸ்சன்ஜர் மூலமாக, வாட்ஸாப் மூலமாக எனது தொடர்களுக்கு வரும் பாராட்டுகளை, கண்டு மலைத்து போகிறேன்.
சர்ச்சைகளுக்கும், மற்றவர்களை திட்டுவதற்கும் மட்டுமே, ஒரு தளமாக மாறிவரும் முகநூலில் , தொன்மையான, நுட்பமான, சுவையான தகவல்களை மட்டுமே பரிமாறிக்கொள்ள முடியும் என்பதை உணர்ந்தவனாக, எனது ஆறாவது தொடரை துவங்குகிறேன்.
சில நேரங்களில் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட வேண்டி இருக்கும். அமாவாசைக்கு அப்துல் காதர் கடையில் கூட வாழைக்காய் வாங்க வேண்டி இருக்கும். அம்மாதிரி, ''சிவந்த மண்'' சினிமாவுக்கு வித்திட்டது, சாத்தி என்கிற இந்திபடம். ''சாத்தி'' படத்தை ஈன்றது, நமது ஏ பீம்சிங்கின் படமான பாலும் பழமும்தான். சிவந்த மண் கதைக்கு வித்திட்டது, பாலும் பழமும் படத்தில் இடம்பெற்ற, ''நான் பேச நினைப்பதெல்லாம், நீ பேச வேண்டும்'' பாட்டுதான் என்றால் நம்புவீர்களா ?
நீங்கள் பேச நினைப்பதைத்தான் நான் முகநூலில் பேசி வருவதால், ''நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்'' பாட்டில் இருந்துதான் அந்நிய மண்ணில் சிவந்த மண் கதையை துவக்குகிறேன் .
டி ஏ நரசிம்மன் என்கிற காலச்சக்கரம் நரசிம்மா கடந்த முப்பத்தி ஐந்து வருடங்களாக பத்திரிக்கையாளராக திகழ்கிறார். இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் தனது பணியை துவக்கியவர் தற்போது . தி ஹிந்து ஆங்கில நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இருக்கிறார். சுமார் 15 நாவல்களை எழுதி இருக்கும் இவரது முதல் நாவல் காலச்சக்கரம், வெளியிடப்பட்டு பரபரப்பாக விற்பனையாக, இவரது பெயர் காலச்சக்கரம் நரசிம்மாவாக மாறியது. இவரது ரங்கராட்டினம் நாவலை படித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரை அழைத்து பேசி பாராட்டி, திருவரங்கத்தில் போட்டியிட போவதாக அறிவித்தார். சங்கதாரா , பஞ்ச நாராயண கோட்டம், கர்ணபரம்பரை, குபேரவன காவல், அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா போன்ற இவரது நாவல்கள் இவருக்கு தனி வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளன. தற்போது இவர் எழுதியுள்ள ஐந்து பாகங்களை கொண்ட அத்திமலைத்தேவன் பெரும் பரபரப்புடன் விற்பனையாகி கொண்டிருக்கிறது.
சின்ன திரைகளில் கிருஷ்ணா காட்டேஜ், அபிராமி, அனிதா வனிதா, மாயா போன்ற தொடர்கள் உள்பட பல தொடர்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார். சிங்கப்பூர் தமிழ் முரசுக்கு சிறப்பு அரசியல் விமர்சகராகவும் கட்டுரைகள் எழுதி உள்ளார்.
பிரபல திரைப்பட இயக்குனரும் நகைச்சுவை வசனகர்த்தா சித்ராலயா கோபு, மற்றும் எழுத்தாளர் கமலா சடகோபனின் மகன் ஆவார். இவரது மகன் ஷ்யாம் திருமலை என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் துணை மற்றும் இணை இயக்குனராகவும், மகள் ஸ்ரீயந்தா இயக்குனர் ராதாமோகனின் காற்றின் மொழி மற்றும் பொம்மை படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளனர்.
குமுதத்தில் தற்போது மூவிடத்து வானரதம் என்கிற சரித்திர தொடர்கதையை எழுதி வருகிறார்.
காலச்சக்கரம் நரசிம்மா அவர்களை tanthehindu@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்