தன் தம்பி ரவி, திவ்யா என்னும் மோசடிப் பெண்ணை நல்லவள் என்று எண்ணி தீவிரமாய்க் காதலிக்க, அவனை அப்பெண்ணின் வலையிலிருந்து மீட்க நினைக்கும் அண்ணன், அவளால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட இளைஞன் சங்கரை அழைத்து வந்து உண்மையைச் சொல்ல வைக்கிறான்.
அந்த இளைஞன், திவ்யாவிற்கும், அவள் தாய் மற்றும் தாய் மாமனுக்கும் இதுதான் பிழைப்பே, என்றும் அவளால் தான் தன் சொத்துக்கள் முழுவதை இழந்து விட்டதையும், அடுத்ததாய் உங்களிடம் வந்திருக்கிறார்கள், என்பதையும் எடுத்துரைக்கிறான். ஆனால் அதை நம்ப மறுத்த ரவி, தன் காதலைத் தொடர்கிறான்.
“அந்த திவ்யாவை நான் காதலிப்பது போல் நடித்து...என் காதல் வலையில் அவளை விழ வைத்தால் நம்புவாயா?” என்று அண்ணன் சவாலாய்க் கேட்க, ஏற்கிறான் ரவி.
தன் சவாலில் அண்ணன் வெற்றி பெற்றானா...? தம்பியை மீட்டானா?
கதையை நாசூக்காக நகர்த்திச் சென்று, இடையில் ஒரு கொலைச் சம்பவத்தையும் இணைத்து, சற்றும் சுவாரஸியம் குறையா வண்ணம் எழுதிப் படைத்திருக்கின்றார் நாவலாசிரியர்.
சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.
தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.
சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.
கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.
Rent Now