Karthika Rajkumar
அந்நாளில் வரைந்த படங்கள் இன்றும் பத்திரமாகப் பெட்டிகளில், அல்லது வேறு பத்திரமான இடங்களில், நானும் என் Zoology record note-ல் வைத்திருக்கிறேன். அந்தப் படங்கள் உருவான நாட்களில் மகத்தான சந்தோஷம் தந்து, திருப்தியைத் தந்தவை. நீ நல்ல ஒரு artist ஆகப் போறடா என்று பாராட்டுக்களை நிறைய வாங்கித் தந்தவை. ஆனால் அவைகளை இன்றுபார்க்கிற பொழுது, அதன் அபத்தங்கள், குறைகள் மிகத் தெரிந்தாலும், இவைகள் எல்லாம் அவைகளை அலட்சியப்படுத்திவிடச் செய்யாமல், அந்நாள் நல்ல நினைவுகளின் சாட்சியங்ககளாகவே பத்திரப்படுத்தி வைக்கத் தோன்றி இருக்கின்றன. என்றாலுமே, அந்நாளில் வரையப் பெற்ற எல்லாப் படங்களுக்குமே இந்தத் தகுதி இல்லாமல், குறிப்பிட்ட சிலவைகளுக்கு மட்டுமே பத்திரப்படுத்தப்படுகிற தகுதி இருந்திருக்கிறது ஒரு வகையில் சொல்லப்போனால் இந்தக் காரியம், இத்தொகுப்பிலிருக்கிற என் சில பழைய குறு நாவல்களுக்கும் கூட ஓரளவிற்குப் பொருந்தும் என்று தோன்றுகிறது.
எழுத்தை சீராகவும், தொடர்ச்சியாகவும் எழுத ஆரம்பித்த பின் இவருக்கு ஏற்பட்ட இலக்கிய பரிச்சயமுள்ள நண்பர்களின் நட்பும் நிறைய புத்ககங்களும், இவரை நவீன இலக்கியத்தில் வெவ்வேறு அனுபவ விஷயங்களுடன் எழுத்தை தீவிரமாக்கியது. நட்பு, காதல், மனிதம் இவற்றின் அடிப்படை உணர்வுகளை மென்மையாக வெளிப்படுத்துவதில் வாழ்க்கையை நேசிக்கிற ஒரு மனித குமாரர். சக மனித உறவுகள் குறித்த அக்கறையும், இவரின் பெண் பாத்திரங்களும் சற்று வித்தியாசமானவை. வாழ்ந்து கொண்டிருக்கிற மலைப் பிரதேச அநுபவங்களும் அந்த சூழலும் கதைகளில் பரவிக் கிடக்கின்றன. ' வெகு ஜன இதழ்கள் மூலமாவே, எழுத்துலகிற்கு அறிமுகமானவர். இலக்கிய இதழ்களிலும் நிறையவே எழுதி வருகிறார். கவிதைகளிலும் தீவிர ஈடுபாடு கொண்டுள்ள கார்த்திகா ராஜ்குமார் உதகையிலுள்ள Hindustan Photo Films-ல் Senior Chemist ஆக வேலை.