நம் பண்டைய காலத்தில் திருநங்கைகள் அரசர்களாய் சமய மரபுகளை உருவாக்கியவர்களாக, ஆன்மிக வழிகாட்டிகளாக இருந்திருக்கின்றனர். மத பீடங்களைக் கூட நிறுவியிருக்கின்றனர்.
அலி, அரவாணி போன்ற அடையாளப் பெயர்களுடன் அழைக்கப்பட்டு கேலிப் பேசப்பட்டு வந்த நங்கைகள் இன்று மிக மரியாதையான இடத்தில் அனைவராலும் மதிக்கப்படும் இடத்தில் இருக்கிறார்கள் என்பது நமக்கு கொஞ்சம் நிம்மதியை தருவதாய் இருக்கிறது.
ஆனால் இந்த நிலைக்கு வருவதற்கு அவர்கள் பட்ட அவமானங்கள் இந்த சமுதாயம் கொடுத்து வந்த தொல்லைகள் உறவுகளும் சுற்றமும் படுத்தியபாடுகள். அதனால் ஏற்பட்ட மனக்குழப்பங்கள் தற்கொலை எண்ணங்கள் என மிகக் கொடூரமான வாழ்க்கை பயணத்தை அவர்கள் கடந்து வந்திருக்கிறார்கள் என்பதை அறிய வரும்போது மனம் கனத்துப் போகிறது.
இந்த கட்டுரைகளின் ஆசிரியர் லதா சரவணன் இதுவரை 25 நூல்களுக்கு மேல் எழுதி தன்னை அடையாளப்படுத்தியிருந்தாலும் காகிதப்பூக்கள் என்ற அவரின் நூல் மூலம் திருநங்கைகளின் வாழ்க்கையை மிகத் துல்லியமாய் படம்பிடித்துக்காட்டி தன்னை மேலும் திடப்படுத்திக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும்.
அலிகளும், அரவாணிகளும் எப்படி திருநங்கைகளாய் உருவெடுக்கின்றனர் என்பதை இத்தனை வலிகளோடு பதிவுசெய்த வேறு நூல் தமிழில் இல்லையென்றே சொல்லமுடியும் அத்தனை வலிகளையும் படிக்கும் நமக்கு கடத்தி அந்த வலிகளிலிருந்து நாம் ஓடிவிட வேண்டும் என்ற பதைபதைப்பை நமக்குள் கடத்தியிருப்பது படைப்பாளியின் எழுத்து ஆளுமைக்குச் சான்று.
அதேபோன்ற மன பதைபதைப்பை ஏற்படுத்துகிறது லதா சரவணனின் "சாதிக்கத் துடிக்கும் நங்கைகள்" நூலில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு நங்கைகளின் வாழ்க்கைப் பயணமும் அதில் இருக்கும் மேடு பள்ளங்களும் 16 கட்டுரை என்று சொல்லிவிடாதபடி 16 ஜீவன்களின் வாழ்க்கைப் போராட்டத்தை கவிதையின் இலக்கணத்தோடு காதல் கலந்து அன்பின் வெளிப்பாடாய் வார்த்தைகளைப் போட்டு அந்த திருநங்கைகளின் இடத்தில் நாம் இருந்திருந்தால் நம் நிலை என்னவாயிருக்கும் என் படிக்கும் ஒவ்வொருவரையும் யோசிக்க வைத்திருக்கிறது லதா சரவணனின் எழுத்துக்கள்.
இனிமேலாவது சாலைகளில் திருநங்கைகளை பார்க்க நேரிட்டால் அவர்களுக்குப் பின்னும் ஓர் அழகான வாழ்க்கை இருந்திருக்கிறது ஒரு அவலமான வாழ்க்கையையும் தாண்டிதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள் என இந்த கட்டுரைகளைப் படிப்பவர்களை நினைக்க வைத்திருக்கிறது 'சாதிக்கத் துடிக்கும் நங்கைகள்'.
எழுத்தாளர் லதா சரவணன் 1981ல். பிறந்தார் சென்னை பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகப் படிப்பினை முடித்தார். வடசென்னையில் வெற்றிகரமாக இயங்கி வரும் ஸ்ரீ சாந்தி சாரீஸ் என்னும் நிறுவனத்தில் கணவருடன் இணைந்து நடத்திவருகிறார். இரட்டை பெண் குழந்தைகள் 10ம் வகுப்பிற்கு அடியெடுத்து வைக்கிறார்கள். 2003 ல் முதல் சிறுகதை தங்கமங்கை என்னும் இதழில் வெளியானது. முதல் நாவல் 2004 ஜனவரியில் பொங்கல் விருந்தாக கண்மணியில் பனிக்கால் வசந்தங்கள் என்னும் தலைப்பில் வெளியாகி இருந்தது. அது முதல் 53 நாவல்களும், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், கட்டுரைகளும், வெகுஜனப்பத்திரிக்கைகளில் வெளியாகி உள்ளளது. (ராணி, தேவி, குமுதம், மாலைமலர், குடும்ப நாவல், தினமலர், தினதந்தி குடும்பமலர், பெண்மணி).
இவரது திருநங்கைகளின் வாழ்க்கை குறித்து காகிதப்பூக்கள் என்னும் நாவல் பிரசத்தி பெற்றது. அதே போல் ராணி வார இதழில் 2016 ம் ஆண்டில் 23 வாரத்தொடராக திருநங்கைகள் ஒவ்வொருவரின் வாழ்வியல் இவரது எழுத்தில் வெளிவந்திருந்தது. திருக்குறள் மையம் சார்பாக முப்பது திருக்குறளிற்கு - அதன் சாரம்சம் குறையாமல் நவீன காலத்தின் இயல்புகளை தொகுத்த உயிரோவியமும் 2015 ம் ஆண்டிலேயே ராஜா அண்ணாமலை மன்றத்தில் திருக்குறன் செம்மல் திரு. தாமோதரன் அவர்களால் வெளியிடப்பட்டது.
எழுதுவதோடு மட்டுமன்றி முருகதனுஷ்கோடி, கேசிஎஸ், எம்.ஜியார் ஜானகி கல்லூரி, சேம் வைவா, விநாயகா மிஷன், சாரதாம்மாள் மகளிர் கல்லூரி, எத்திராஜ், குயின்மேரிஸ், ஸ்டெல்லா மேரிஸ் இன்னும் பல இடங்களில் தன்னம்பிக்கைக் குறித்த பேச்சுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். அரசியல் நீங்கலான தொலைக்காட்சி நிகழ்வுகளில் பெண்ணியம் தொடர்பான கருத்துக்களையும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுகளையும் வலியுறுத்தியிருக்கிறார். (மக்கள், சன்டிவி, புதிய தலைமுறை, பெப்பர்ஸ், நியூஸ் 7, பொதிகை, வானொலி நிலையம், வின்டிவி)
தற்போது ஒன் இந்தியா தமிழ், மற்றும் சில்சி என்னும் ஆன்லைன் தளங்களில் இவரது கதைகள் கட்டுரைகள் வெளியாகிவருகிறது. சென்ற வருடம் குமுதத்தில் நாவல் வெளியாகி இருந்தது. 2011ல் குயின் மேரிஸ் கல்லூரியிலும், 2012 போலீஸ் பப்ளிக் அசோசியேஷன் 2015 நேசம் மனிதவள மேம்பாட்டு மையம், 2016ல் ஒ.எம்.சி வில் மதுரை தமிழ் இலக்கிய மன்றம் சிறந்த எழுத்தாளர் மற்றும் கவிதையாசிரியர் என்னும் விருதும், 2008 ல் அரசாங்கம் நூலகம் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் கவரிமான் என்னும் கதைக்கு தேவநேயப்பாவணர் அரங்கில் திரு.பரிதி இளம்வழுதி அவர்களின் மூலம் பரிசு பெற்றார்.
உமாபதி கலையரங்கத்தில் தங்கமங்கை நடத்திய விழாவில் தங்கமங்கை என்னும் விருதை பெற்றார். அண்மையில் நடைபெற்ற அறம் தமிழ்பண்பாட்டு மையத்தில் ஆற்றல் அரசி என்னும் விருது தரப்பட்டது. எழுத்துலகிலும் தொழில் துறையிலும் அவர்களின் பணி தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
Rent Now