“துபாய் சென்றிருக்கும் என் மகன் நிறைய சம்பாதித்துக் கொண்டு, திரும்பி வருவான், அவன் வந்த பிறகு என்னோட வாழ்க்கையே வேற மாதிரி இருக்கும்” என்று வருடக் கணக்கில் ஊருக்குள் சொல்லித் திரியும் துபாய்க் கிழவியை சிலர் சிரிப்போடு பார்ப்பர். சிலர் அனுதாபத்தோடு பார்ப்பர்.
கிழவியின் மகன் துபாயிலிருந்து எழுதும் கடிதங்களைப் படித்துக் காட்டி, அதற்கு பதில் போடும் வேலையை, மனிதாபிமான அடிப்படையில் செய்து வந்தார் ராஜாஜி. ஒரு நாள் துபாய் போலீஸிடமிருந்து கிழவி மகன் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாய் கடிதம் வருகின்றது. பெரும் குழப்பத்திலாழ்ந்த ராஜாஜி, அந்த விஷயத்தை கிழவியிடமிருந்து மறைக்கிறார். அதை உறுதிப்படுத்தும் விதமாய், கிழவியின் மகன் எழுதுவது போல், தானே கடிதம் எழுதி கிழவிக்கு அனுப்பி வந்தார். கிழவி மரணிக்கும் போது, தன் மகன் எங்கோ உயிரோடு இருக்கிறான், என்கிற நிம்மதியான சந்தோஷத்தோடு மரணிக்கட்டும், என்கிற நல்ல எண்ணத்தில் ராஜாஜி அந்தப் பழக்கத்தை தொடர்ந்து வந்தார். “கிழவிக்கு அந்த உண்மை தெரிய வந்ததா?..அதன்...பின் நடந்தது என்ன?” என்பதை அறிந்து கொள்ள கதையை வாசியுங்கள்...வாசகர்களே!சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.
தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.
சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.
கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.
Rent Now