வினோத்தின் மாமன் மகள் நர்மதா. அவர்களது பள்ளிக்காலத்தில் இரு குடும்பமும் கோவையில் இருந்ததால் இருவரும் ஒன்றாக சந்தோஷமாக இருந்தனர். வினோத்தின் தந்தைக்கு மும்பைக்கு மாற்றலாகி விட இருவரும் பிரிகின்றனர். பிரியும் ஒரு ஒப்பந்தம் செய்கின்றனர், “எந்தக் காரணத்தைக் கொண்டும், நாம் போனில் பேசவோ...வாட்ஸ் அப்பில் போட்டோ அனுப்பிக் கொள்ளவோ வேண்டாம்...! உன் உருவம் எனக்குள் சஸ்பென்ஸாகவே இருக்கட்டும்...கல்யாணத்தின் போது பார்த்துக் கொள்வோம்...! அப்பத்தான் திரில்லாய் இருக்கும்” என்று.
அதன்படியே வாழ்கின்றனர். பல வருடங்களுக்குப் பிறகு அண்ணன் மகள் நர்மதாவை வினோத்திற்கு பெண் கேட்க வந்த வினோத்தின் தாய் அதிர்கிறாள். நர்மதா வினோத்தை விட முக்கால் அடி உயரமாயிருக்க, கல்யாணம் நடக்காது என முடிவு செய்கிறாள். ஆனால் வினோத்தும் நர்மதாவும் உயரம் பெரிய விஷயமில்லை, என்று உறுதியாயிருந்து திருமணம் செய்கின்றனர்.
தாம்பத்ய வாழ்க்கையில் பல நேரங்களில் அந்த உயரம் காரணமாய் சந்தேகங்களும், சண்டை சச்சரவுகளும் வர, அதை எப்படி சந்திக்கின்றனர்...? வாழ்க்கையை எப்படி எதிர் கொள்கின்றனர்...? என்பதைக் கதையாக்கியிருக்கும் நாவலாசிரியர், இறுதியில் மாபெரும் அதிர்ச்சியான ஒரு விஷயத்தைக் கொண்டு வந்து வாசகர்களின் மனத்தைக் சோகமாக்கி விடுகின்றார்.
சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.
தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.
சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.
கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.
Rent Now