நாயகன் : ஸ்டீபன்.
நாயகி : ஸ்டெல்லா.
சிறு வயது முதலே குடும்பப் பொறுப்புகளை சுமக்கத் துவங்கும் ஸ்டீபன். தன் தங்கைகளின் திருமணத்துக்காகவும், வீட்டின் நலனுக்காகவும் படிப்பை முடித்தவுடனேயே வெளிநாட்டுக்குச் சென்று உழைக்கத் துவங்குகிறான். அவனுக்கென எந்த ஒரு ஆசையையோ, விருப்பத்தையோ வைத்துக் கொள்ளாதவன்.
அவனுக்கு வழிகாட்டியாகவும், உற்ற துணையாகவும் இருக்கும் மிக்கேல் மாமாவின் பெண்ணான ஸ்டெல்லாவை விரும்புகிறான். ஆனால், மகனை தங்கள் நல்வாழ்வுக்கென மட்டுமே பயன்படுத்தும் தாய், அவனது ஒரே விருப்பத்தை மதிக்காமல் போனால்? விரும்பிச் சுமக்கும் சுமையே ஸ்டீபனுக்கு சுமையானால்?
வெளிநாட்டு வாழ்க்கையும், தனிமையும் அவனை என்ன செய்யும்? காத்திருக்கச் சொன்ன காதலி அவனுக்கென காலங்கள் கடந்தும் காத்திருந்தாளா? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடையறிய தொடர்ந்து படியுங்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்தை, எங்கள் ஊரில் இருந்த நூலகம், நாவல் பக்கம் திருப்பியது.
கல்லூரிப் படிப்பு, வேலை, திருமணம் என என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், புத்தகம் எனக்கு உற்ற தோழியாக இருந்தது மட்டும் உண்மை. ஒரு கட்டத்தில், எனக்குள் இருந்த எழுத்தார்வம் தலை தூக்க, என் வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்போடு என் எழுத்துப் பயணம் இனிதே துவங்கியது.
இப்பொழுதுதான் துவங்கியதுபோல் இருந்த என் எழுத்துப் பயணத்தில்..., ஒவ்வொரு கதையையும் என் முதல் கதையாகவே கருதி எழுதுகிறேன். ஒவ்வொரு கதையின் கருவை தேர்ந்தெடுப்பதும், அதை சுற்றிய என் கற்பனையை விரிவு படுத்துவதிலும், ஒரு தனி கவனம் செலுத்தியே என் படைப்புக்களை படைக்கின்றேன்.
என் வாசிப்பு ரசனை எப்பொழுதும் பொழுதுபோக்கு சார்ந்ததாகவே இருக்கும். எனவே என் படைப்புக்களும் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாகவே இருக்கும்.
புத்தக வடிவில் உரு மாறிய என் கதைகள், அடுத்த கட்டமாக மின்நூல்களாக உங்கள் வீட்டுக்கு வருவதை எண்ணி மிகுந்த சந்தோஷமடைகிறேன். ‘புஸ்தக்’ நிறுவனத்தோடான என் பயணம் இனிமையாக இருக்கும் என எண்ணுகிறேன்.
என் படைப்புக்களை வாசிக்கும் நீங்களும், உங்கள் கருத்துக்கள், நிறைகள், குறைகள் என அனைத்தையும் என் infastories@gmail.com என்ற முகவரிக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக காத்திருக்கிறேன்.