இளம் வயதில் ரத்த முறுக்கத்தில் காரை வேகமாய் ஓட்டிச் சென்று ஒரு விபத்தை ஏற்படுத்தி ஒரு பெரியவரின் உயிரைப் பறிக்கிறான் பணக்கார குடும்பத்தின் ஒரே வாரிசான சூர்யா. அவனை சட்டத்திடமிருந்து காப்பாற்றும் விதமாய் தன் வீட்டு டிரைவரை விபத்திற்குப் பொறுப்பேற்கச் செய்கிறார் சூரியாவின் பணக்காரத் தந்தை. அதற்குப் பிரதியுபகாரமாய் அவர் குடும்பத்திற்கு பெரும் தொகை வழங்குவதோடு, அவர் மகள் திருமணத்தை தானே நடத்துவதாகவும் வாக்குக் கொடுக்கிறார். சூர்யாவை அமெரிக்காவிற்கு அனுப்பி விடுகிறார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பிய சூர்யா தன் தந்தை அந்த டிரைவர் குடும்பத்தை ஏமாற்றி விட்டதைக் கண்டு பிடிக்கிறான். அவரது பாவத்தைக் கழுவும் விதமாய் அந்த டிரைவரது மகளைத் தேடிக் கண்டு பிடித்து, துரத்தித் துரத்திக் காதலிக்கிறான். அவர்களை ஏமாற்றிய அந்தப் பணக்கார வீட்டைச் சேர்ந்த பையன் என்பது தெரிந்தால் அவள் தன்னை ஏற்றுக் கொள்ளமாட்டாள், என்பதால் தன்னை ஒரு ஏழை என்று சொல்லிக் காதலிக்கிறான்.
ஒரு நாள் குட்டு உடைகிறது…
விளைவு?
நாவலில்…..
சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.
தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.
சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.
கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.
Rent Now