'ஐரிஷ் பிரச்சினை' என்பது என்ன? “அது ஐரிஷ்காரர்களுக்கே தெரியாது” என்றொரு முறை குறிப்பிட்டார் மார்க்சிய அறிஞர் டெர்ரி ஈகிள்டன் - சற்று எள்ளலாக. அந்த அளவுக்குச் சிக்கல்களும் சிடுக்குகளும் எதிர்பாராத் திருப்பங்களும் நிறைந்ததுதான் அயர்லாந்தின் தேசிய விடுதலைப் போராட்டம். இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட அது 'தொடரும் போராட்ட’மாகவே இருக்கக் கூடும். ஒரு பரந்த மார்க்சியக் கண்ணோட்டத்திலிருந்து அப்போராட்ட வரலாற்றை விவரிக்கிறது இந்த நூல். மார்க்சியத்திற்கும் தேசியத்திற்குமிடையிலுள்ள உறவுகள், முரண்பாடுகள், தேசியத்தின் உள் முரண்பாடுகள், அதன் சறுக்குப் பாறைகள், புதை மணல்கள் ஆகியனவும் சுட்டிக் காட்டப்படுகின்றன. நமக்கு மிக அருகாமையில் நடைபெறும் சில தேசிய இனப் போராட்டங்களிலும் ஐரிஷ் தேசியத்தின் கூறுகள் சில பிரதிபலிப்பதை இந்த நூல் குறிப்பால் உணர்த்துகிறது. வட அயர்லாந்திலுள்ள இன்றைய ஸின்ஃபெய்ன் இயக்கத்தை அனுதாபத்துடன் பார்க்கும் அதே சமயம் அது எதிர்கொள்ளும் கடுமையான சவால்களையும் எடுத்துரைக்கிறது.
எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும் எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம், தமிழக அரசியல் ஆகியன பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். இவர் தமிழாக்கம் செய்துள்ள நூல்களில் மார்க்ஸ், எங்கெல்ஸ் எழுதிய ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ மிகவும் குறிப்பிடத்தக்கது. பெண்ணியச் சிந்தனையாளர் வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர்.
Rent Now