சிறுகதையின் பரிணாம வளர்ச்சி என்பது எங்கோ போய்க் கொண்டிருக்கிறது. அதற்கான யுத்தம் கலைஞர்களிடத்தும் வாசகர்களிடத்தும் தொடர்ந்து கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது.
நுணுக்கங்கள் பல நிறைந்தவை நம் வாழ்க்கைமுறை.
பொதுவாக, வாழ்தலின் அர்த்தம் புரிந்தவன்தான் கலைஞனாக இருக்க முடியும். அல்லது அதன் அர்த்தம் தெரிந்தவர்கள் தான் கலையாக வாழ்க்கையை வாழ்ந்துகாட்டவும் முடியும்.
அல்லாமலும் வெற்றுத் தோற்றத்தில் போலி ஆரவாரங்களோடு ஏதோ ஒரு முகமூடி போட்டுக்கொண்டு பிரமாண்டமான கதாமாந்தர்களையும் காட்சி வருணணைகளையும் கொண்டு கலை இலக்கியத் தளத்தில் அடுக்குகிற சொல்விளையாட்டுக்கள் எல்லாம் சமூகரீதியாக ஏற்படுத்தும் தாக்கத்தை உற்றுநோக்க வேண்டியுள்ளது.
இதோ இவர்களும் மனிதர்கள்தாம்!
எனது கதைகளின் மாந்தர்களைத்தான் சொல்கிறேன். இந்தத் தொகுப்புதான் என்பதில்லை. எனது ஒட்டுமொத்தத் தொகுப்பையும் உள்வாங்கி அலசி ஆராய்கிறவர்களுக்குத் தெரியும்.
தொலைந்துபோன வாழ்க்கையை மீண்டும் பெறவும் காணாமல் போன மனிதத்தன்மையை மீட்கவும், கிடைக்காமல் போன உரிமைகளைத் தட்டிக் கேட்பதுமான மனிதர்களும் அவர்கள் சார்ந்த வாழ்வும் கதைகளில் பரவலாக நிறைந்து கிடக்கும். இதன் காரணகர்த்தாக்கள் யார் என்பது ஒளிவு மறைவின்றி வெட்ட வெளிச்சமாய் அம்பலப்பட்டு நிற்பதையும் கதைகளினூடே காணலாம். இதில் ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்வின் நுணுக்கங்கள் பற்றியிருக்கிறது. எல்லாரிடமும் இடைவிடாத சோகம், ஏழ்மை, வறுமை... என ஏதோவொன்று வாழ்தலுக்காய் அன்றாடம் துரத்திக் கொண்டிருக்கும். எல்லாவற்றையும் உள்வாங்கிய இந்தச் சமூகத்தில் படைப்புச் செயல்பாடுகளின் வீர்யமும் வீச்சும் என்பதைச் சாதி, ஆதிக்க வேறுபாடுகளின்றி பார்ப்போமேயானால் நாம் திட்டவட்டமாய் அறிந்துகொள்ள முடியும். இது யாருக்கான வாழ்வு, யாருக்கான இலக்கியம், கலை வடிவங்கள் என்பதை வெகு எளிதாகவே உணர முடியும். இத்தகு வாழ்வின் நுண்ணிய பதிவுகள் தாம் இச்சிறுகதைகள் என்பதைப் பெருமையாக என்னால் அறிவிக்க முடியும்!
- விழி. பா. இதயவேந்தன்
விழி பா. இதயவேந்தன் அவர்கள் சிறுகதை, கவிதை, கட்டுரை, குறுநாவல், வீதிநாடகம் என்று பன்முகம் கொண்ட எழுத்தாளர். இவரின் படைப்புகள் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட இதழ்களில் வெளி வந்துள்ளது. இந்தியா டுடே, கணையாழி, தினமணி கதிர், அரங்கேற்றம், தினப்புரட்சி, நான்காவது பரிமாணம் (கனடா), சதங்கை, இந்தாம் (மின்னிதழ்), மின்னம்பலம் (இணைய இதழ்) போன்று பல்வேறு தளங்களில் எழுதியுள்ளார்.
சென்னை சாகித்ய அகாடமியில் கதை, வாசிப்பு மற்றும் தமிழில் நவீன சிறுகதைகள் தொகுப்பில் கதை இடம் பெற்றுள்ளது. புது டெல்லி மற்றும் சாகித்ய அகாடமியின் இதழில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கேரள ஜனநாயகம் மாத இதழில் மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இவரின் சிறுகதைகளில் ஆறு இளம் முனைவர் (M. Phil.,) பட்டத்திற்க்கும், ஒருவர் முனைவர் (Ph.D.,) ஆய்வும் மேற்கொண்டு முடித்துள்ளனர். சென்னையிலுள்ள 'தலித் முரசு' பத்திரிக்கையில் இணை ஆசிரியராகவும் உள்ளார்.
இவரைப் பற்றி பழ மலாய் அவர்கள் எழுதி உள்ள குறிப்பு:
விழுப்புரத்தில், அடிநிலை மக்களிடையில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருபவர், அவர் களிடமிருந்து அந்நியமாகி வெறும் போலி யாகிப் போகாமல், தங்கள் இருப்பை, மன சாட்சிக்குத் துரோகம் செய்யாமல், எண்ணி எண்ணிப் பார்க்கிறார். அவர்களோடு சேர்ந்து போராடுகிறார். இந்த நிகழ்வுப் போக்கில் தான், இவர், நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுக்கிறார், வீதி நாடகங்களில் நடிக்கிறார், செய்திக் கட்டுரைகள் எழுதுகிறார், கவிதை, கதை, நாவல் - என்று வரைகிறார்.
அனுபவ மண்ணில் வேர்பாய்ச்சி, அழகி யல் வானில் கிளை பரப்புவதாலேயே இதய வேந்தனுடைய எழுத்துக்களை நாங்கள் இலக்கியம் என்று ஏற்றுக் கொள்கிறோம்.
- பேராசிரியர் பழ மலாய்
Rent Now