இதுவரையில் எந்த எழுத்தாளரும் தொட்டிராத, மார்ச்சுவரியில் அறுத்துப் போட்ட பிணத்தைத் தைக்கும் ஒரு மனிதனைக் கதைப் பாத்திரமாக கொண்டு இந்த நாவலைப் படைத்துள்ளார் கதாசிரியர்.
தாயில்லாத தனது ஒரே மகன் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார் அருணகிரி மார்ச்சுவரிப் பணியாளர். ஆனால் மகனோ. மிகவும் மோசமானவனாகத் திரிகிறான். அனைத்துக் கெட்ட வழக்கங்களுக்கும் அவன் அதிபதி. அது தெரிந்திருந்தும் அவனைக் கண்டிக்க இயலாமல் உள்ளுக்குள் புழுங்கியே வாழ்கிறார் அருணகிரி. மார்ச்சுவரியில், ஒவ்வொரு முறை சவங்களைத் தைக்கும் போது, யாரென்றே தெரியாத, இறந்து போன அந்த ஜீவனுக்காக வாய் விட்டு அழுதபடியே தைப்பார் அவர்.
ஊரில், சிறுமியைச் சீரழித்த குற்றத்திற்காக ஒருவனை போலீஸ் என்கௌண்டர் செய்கிறது. மார்ச்சுவரியில் தன் மகனின் சவத்தைக் கண்டு அருணகிரி அதிர்ச்சியில் என்ன செய்தார்...? கதறினாரா...?
இறுதி அத்தியாயத்தில், அருணகிரி செய்த ஒரு காரியம் வாசிக்கும் அனைத்து மனங்களையும் நெகிழச் செய்து, கண்ணீர் சிந்த வைக்கும்.
சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.
தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.
சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.
கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.
Rent Now