அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு புலம் பெயர்ந்த இந்தியக் குடும்பம் பற்றியக் கதை.
கதையின் நாயகி மீரா...!
அற்புதமான கதாபாத்திரம். அமெரிக்காவில் பிறந்து இருந்து அதனோடு ஒன்றிப்போன பெண் இந்திய மண்ணில் ஒட்டி உறவாடுவதில் ஏற்படும் அந்நியத்தன்மை;
இடையில் வானவில் போல் வரும் வசந்தம்.
ஹரி…
மீராவுக்கு உற்ற தோழனாய் வரும் பாத்திரம்...
மீராவின் குடும்ப உறவுகள்...அவள் படிக்கும் வகுப்பறைத் தோழிகள்… அவர்களுடன் ஏற்படும் கருத்து வேற்றுமைகள் என நாவல் முழுதும் வரும் மனத்தைத் தொடும் கதாபாத்திரங்கள்...என 'காதலெனும் வானவில்’ நம் கருத்தைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் வாஸந்தி அவர்களால் சிறப்பாக சித்திரிக்கப்பட்டுள்ள சமூக நவீனம்.
நாவலைப் படித்து முடித்ததும் மனதில் ஏற்படும் ஓர் நிறைவு வாசகர்களை மகிழ்ச்சியும், நிறைவையும் அடையச் செய்யும் என்பது உறுதி.
மைசூர் பல்கலைக்கழகப் பட்டதாரி. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரும் கூட. இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 9 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாசாரம் அரசியல் என பல்வேறு புள்ளிகளை தொட்டுச் செல்லும் அவரது கட்டுரைகளில் பல அவை வெளி வந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.
கலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு - இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எ ழுத்தாளர் மாநாட்டுக்காக, சொற்பொழிவுகளுக்காக குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர்.
பெண் சார்ந்த பிரச்சினைகளைப்பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய 'CUT OUTS, CASTE AND CINE STARS' என்ற புத்தகத்தை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
பஞ்சாப், இலங்கை , ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சினைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் - மௌனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் குறிப்பிடத் தகுந்தவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான 'ஆகாச வீடுகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.
சமீபத்தில் வாஸந்தி சிறுகதைகள்' என்ற தொகுப்பிற்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருது கிடைத்தது.
Rent Now