கண்மூடித்தனமான ஒரு வழக்கத்தைக் கண்டிக்கத்தானே வேண்டும்?அப்படிப்பட்ட கண்டனங்களை அரசியல்வாதிகள் மேடை போட்டு மைக் வைத்துக் கண்டிப்பார்கள்.
எழுத்தாளன் பேனாவுக்குள் மசியை ஊற்றித் தன் கண்டனத்தை கதை, நாவல் என்ற அமைப்பில் வெளியிடுகிறான் - வலிக்காமல் ஊசி போடும் திறமையான டாக்டர் போல.
பால்யத் திருமணம் என்ற ஒரு கொடுமை நம் நாட்டில் இன்னமும் இருந்து வருகிறது. (இல்லாவிட்டால் பஸ் பின்னாலெல்லாம், கல்யாணமாக வேண்டுமானால் மணமகனுக்கு இத்தனை வயசிருக்க வேண்டும். மணமகளுக்கு இன்ன பிராயம் பூர்த்தியாயிருக்க வேண்டும் என்றெல்லாம் அரசு விளம்பரம் எச்சரிக்குமா என்ன?
இந்த நாவல் அந்த விஷயத்தைத்தான் உங்களிடம் எடுத்துக் கொண்டு வருகிறது. கதாநாயகி கதம்பா எனது இல்லத்தரசியின் 'ஒன்ஸ் அப் ஆன் எ டைம்' (once upon a time) தோழி. அழகிய பேராசிரியை. அவள் திருமணம் ஆனவளா, ஆகாதவளா? எங்களுக்கெல்லாம் தெரியாது. ஏன், அவளுக்கே தெரியாது. பேராசிரியை கதம்பாவின் வாழ்க்கையில் எனது கற்பனையைப் புகுத்தியதன் விளைவே கதம்பாவின் எதிரி. கதம்பாவின் எதிரி ஏற்காட்டில் ஒளிந்து கொண்டிருந்தான். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. வாசகர்களாகிய நீங்களாவது கண்டுபிடியுங்கள்.
நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகாசிரியர், கட்டுரையாளர் என்ற அறிமுகத்தைவிட, அப்புசாமி - சீதாப்பாட்டி நகைச்சுவைப் பாத்திரங்களை சிருஷ்டித்த பாக்கியம் ராமசாமி என்றால் திரு. ஜ.ரா. சுந்தரேசனைச் சட்டென்று வாசக உலகுக்குப் புரியும்.
37 ஆண்டுகள் குமுதம் பத்திரிகையில் உதவி ஆசிரியர், துணை ஆசிரியர் ஆகிய பதவிகளை வகித்துவிட்டு 1990'ம் ஆண்டு ஓய்வுபெற்றார்.
ஜ.ரா. சுந்தரேசன் என்ற அசல் பெயரில் நிறைய நாவல்கள் எழுதியுள்ளார். பூங்காற்று, குங்குமம், மனஸ், கதம்பாவின் எதிரி, நெருங்கி நெருங்கி வருகிறாள், பாசாங்கு, பொன்னியின் புன்னகை போன்ற நாவல்கள் எழுதியுள்ளார்.
இவரது புனைப் பெயர்கள் அனேகம்... அப்புசாமி கதைகளுக்கு பாக்கியம் ராமசாமி என்ற பெயரையே பயன்படுத்துகிறார். மற்ற புனைப் பெயர்களில் குறிப்பிடத்தக்கவை: யோகேஷ், வனமாலி, செல்வமணி, மிருணாளினி, இரா. சிதம்பரம், உதங்கர், சிவதணல், ஜ்வாலாமாலினி.
சிறந்த நகைச்சுவைப் பேச்சாளர் என்ற பாராட்டுப் பெற்றவர். அனேக அரிமா சங்கங்களிலும், ரோட்டரி கிளப்புகளிலும், ஹ்யூமர் கிளப்புகளிலும், தனியார் இலக்கிய கூட்டங்களிலும் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் நிறையத் தடவை பேசியிருக்கிறார். தமிழ் எழுத்தாளர் சங்கம், இலக்கிய சிந்தனை போன்ற பல அமைப்புகளில் இவரது எழுத்துக்களுக்குப் பாராட்டு கிடைத்திருக்கின்றன. 'ஞானபாரதி' 'எழுத்துச் செம்மல்' போன்ற பாராட்டுக்களைப் பெற்றவர். நகைச்சுவை என்றாலும் ஆன்மீகத்தில் ஆழமான நாட்டம் கொண்டவர். இரு ரிக்ஷாக்காரர்கள் பேசிக் கொள்வது போன்ற பாணியில் ஸ்ரீமத் பகவத் கீதையில் கூறப்பட்ட கருத்துக்களை 'பாமர கீதை' என்னும் சிறு நூலில் விரிவாக விளக்கியிருக்கிறார்.
Rent Now