இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் அனைத்தும் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதியிருந்தாலும் அந்த அந்தக் காலத்தின் நிகழ்வுகளின் சிறு துளிகளையாவது இது பிரிதிநிதித்துவப் படுத்தும் என்றே கருதுகிறேன்.
கையில் ஒரு சர்வதேச துலாக்கோலையும். அதன் முள் முனையின் மேல் விழியையும் வைத்துக் கொண்டு இந்த கல்யாணப் பரிசு சிறுகதைத் தொகுப்பை தயவு செய்து பார்க்காதீர்கள். மனதில் ஒரு சராசரித் தனமான பக்குவமே இன்றைய படைப்புகளைப் பார்க்க, படிக்கத் தேவை. இந்த மனப் பக்குவம் இதைப் படிக்கும் வாசகர்களிடம் எதிர்பார்க்கிற ஒரு படைப்பாளி நான்.
கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.
இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.
தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.
தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.
Rent Now