தங்கள் வீட்டு மாடிப் போர்ஷனுக்கு புதிதாக வாடகைக்கு வந்திருக்கும் இளைஞர்தான் தன்னுடைய அபிமான எழுத்தாளர் கோகுலன் என்பது தெரிந்ததும் மிகவும் மகிழ்ச்சியடைகிறாள் காயத்ரி.
தினமும் மாடிக்குச் சென்று அவர் தற்போது எழுதிக் கொண்டிருக்கும் தொடர்கதையின் அடுத்த நகர்வைத் தெரிந்து கொண்டு அதைத் தன் தோழிகளிடம் பகிர்ந்து மகிழ்ந்து கொண்டிருந்தாள் அவள்.
அந்தக் கதையின் இறுதி அத்தியாயத்திற்கு கோகுலன் தீர்மானித்திருந்த கிளைமாக்ஸ் முடிவு அவளுக்குப் பிடிக்காததால் மாற்றச் சொல்கிறாள். ஆனால் அவரோ மறுக்கிறார்.
அதனால, அவருக்குத் தெரியாமல், அவர் கொரியருக்காக தயார் செய்து வைத்திருந்த கவரை எடுத்து, அதிலுள்ள காகிதங்களை எடுத்து விட்டு, தான் எழுதிய கிளைமாக்ஸை வைத்து அனுப்பி விடுகிறாள்.
தான் எழுதிய கிளைமாக்ஸ் மாற்றப்பட்டதை அறிந்த கோகுலன் பத்திரிக்கை ஆசிரியரிடம் சண்டையிடுகிறார். ஆனால், அந்தக் கிளைமாக்ஸ் முடிவிற்காகவே அந்த நாவல் பெரும் பாராட்டைப் பெற, கோகுலன் குழப்பமாகிறார்.
அதை மாற்றியது யார் என்பதை அறிந்து கொண்டாரா?
அறிந்ததும் என்ன செய்தார்?
அதுதான் இந்த நாவலின் உயிர் நாடியே…கதையை வாசியுங்கள்.
சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.
தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.
சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.
கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.
Rent Now