கனவுகள் காணாத மனிதர்கள் அபூர்வம். எண்ணங்களின் எண்ணக் கூடுகள் தான் சில சமயங்களில் கனவுகளாகப் பரிணமிக்கின்றன. கனவுகள் மிகவும் சுவாரஸ்யமானவை. என்ன கனவைக் கண்டோம் என்று விழிப்புற்ற பின்னர் நினைவுக்கு வருகிறதே அது தான் மானிடத்தின் நுட்பமான சிறப்பு.
கனவுகள் எண்ணங்களுக்குத் தக்கபடி மாறுபடுகின்றன. பருவங்களுக்குத் தக்கபடி வித்தியாசப்படும் கின்றன. வயதான ஒருவர் காணும் கனவு ஆன்மிக சம்பந்தப்பட்டவைகளாக - முதிர்ச்சியடைந்த மன நிலையைக் காட்டுவனவாக இருக்கும்.
இளைஞர்கள் காணும் கனவுகள்...
அவைகள் தொடர் ஊர்வலங்கள்...
இங்கே “கனவு ஊர்வலங்களின் கதாநாயகி” சத்யா, காதல் கனவுகளைக் காண்கிறான்.
கனவின் நாயகன் பணக்காரன் கெளசிக். அவனும் சத்யாவை மணக்க ஆசைப்படுகிறான்.
“காதலுக்கு ஜாதியில்லை மதமுமில்லையே - கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே” என்ற கண்ணதாசனின் கவிதைக்கு இவர்கள் உதாரணம். காதலர்களின் காதலுக்குத்தான் கண்ணில்லை. கெளசிக்கின் பணக்கார பெரியம்மாவுக்கும் - கெளசிக்கின் அப்பாவுக்கும் கண்கள் இருந்தன - அந்தஸ்தைப் பார்க்கும் அளவு கோலாக.
இத்தனைக்கும் அப்பா தேவநாதன் ஏழையாக இருந்து சிறிது வசதியான பெண்ணை மணந்து தன் முயற்சியால் பணக்காரர் ஆனவர். அவருக்குப் பணத்தைத் தவிர வேறு எதுவும் கண்களுக்குத் தெரியவில்லை.
சத்யாவை நெருங்கும் மகனை சதுரங்கக் காயை நகர்த்துவது போல் நகர்த்தும் சாமர்த்தியம் பணக்காரர்களுக்கே படரிய கை வந்த கலை. மகளின் காதலைத் தெரிந்து கொண்ட ஏழைத் தாயார் சாவித்ரி படும் மன வேதனை...
ஏற்பாடு செய்யப்பட்ட - கல்யாணம் நின்று போனதற்குக் காரணம் தெரியாமல் தவித்த தவிப்பு...
காதலர்கள் கனவு ஊர்வலம் வருகிறார்கள்... ஆனால், இந்த ஊர்வலத்தின் வெளியே நின்று பெற்றவர்கள் தவிக்கும் தவிப்பு...
இவர்களுக்கு நடுவில் குறுக்கிடும் கதாபாத்திரங்கள்...
என் வாசகர்களே! ‘போதும்... கனவு ஊர்வலத்திற்குள் நாங்கள் நுழைய வேண்டும். இதற்கு மேலும் போக வேண்டாம்’ என்கின்றீர்களா! உங்கள் வார்த்தைக்கு நான் கட்டுப்பட வேண்டியவள் தானே!
என்றென்றும் அன்புடன், லட்சுமி ராஜரத்னம்
திருமதி லட்சுமி ராஜரத்னம் திருச்சி நகரில் 27.3.1942ல் பிறந்தார் பத்தாவது வயதில் திருப்பாவை, திருவெம்பாவை போட்டியில் தங்க நாணயம் பரிசு பெற்றார்.
இதுவரை 1500 சிறுகதைகள், நிறைய நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், 15 சென்னை தொலைகாட்சி நாடகங்கள், 3 மெகா தொலைகாட்சித் தொடர்கள், 3500 க்கும் மேற்பட்ட ஆன்மீகக் கட்டுரைகள் இவரின் எழுத்துலகச் சாதனைகளாகும். 40 சரித்திரச் சிறுகதைகள் எழுதிய பெண் எழுத்தாளரும் இவரே.
காஞ்சி சங்கர மடத்தினால் 1991ல் எழுத்துக்காகவும், 1993ல் ஆன்மீகச் சொற்பொழிவிற்காகவும் கௌர விக்கப்பட்டுள்ளார். இதுவரை 2500 சொற்பொழிகள் செய்துள்ளார். திருவையாறு தியாகராஜ ஆராதனையில் சின்ன கச்சேரி செய்த அனுபவம் உண்டு. இதைத் தவிர கோயம்புத்தூர், தஞ்சையில் கச்சேரிகள் செய்த அனுபவமும் உண்டு. மகள் ராஜஸ்யாமளாவின் நாட்டியற்குப் பாடிய அனுபவமும் உண்டு.
இவருடைய இதயக்கோயில் நாவல் கலைமகள் நாராயணஸ்வாமி ஐயர் பரிசு பெற்ற நாவல். இன்று வரை பலரால் பாராட்டைப் பெற்ற நாவல்.
1999ல் 'செந்தமிழ்ச் செல்வி' என்று ஸ்ரீகுக ஸ்ரீ வாரியார் விருதைப் பெற்றார். ஜனவரி 2002ல் கொழும்புவில் உள்ள இந்து மகா சபை இவருக்கு சொற்சுவை நாயகி என்ற விருதைக் கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது. சங்கப்பலகை என்னும் புகழ் பெற்ற கலைமகள் பத்திரிக்கை ஜனவரி 2019-ல் சிறந்த எழுத்தாளருக்கான விருதை கொடுத்து கௌரவித்தது. ஒரே மகள் ராஜஸ்யாமளாவும் எழுத்தாளர் பரத நாட்டியக் கலைஞர்.
2011-ல் கணவனை இழந்த இவர் அதன்பின் உடல் நலம் குன்றி நான்கு அறுவை சிகிச்சைகள், இன்னும் பல உடல் தொந்திரவுகள் என்று சிரமப்பட்டாலும் 76 வயதிலும் மனம் தளர்வுளராமல் எழுதி வருகிறார். உங்கள் பாராட்டு என்ற பெரிய விருதை விட பெரிய உண்டா? என்கிறார்.
Rent Now