ஏறக்குறைய 24 ஆண்டுகளுக்கு முன்பு பயணம் சென்ற கிழக்கத்திய நாடுகளைப் பற்றி திருமதி வாஸந்தி அவர்கள் இந்நூலில் சுவைபட எழுதியுள்ளார். பயணக்கட்டுரை வெறும் புள்ளி விவரங்களாக இருந்தால் படிப்பவர்களுக்கு சுவாரசியமின்றி போய்விடும். அதே நேரத்தில் வெறும் வர்ணனையாக இருந்தாலும் நூல் பயனுள்ளதாக அமையாது.
ஆனால், ‘கிழக்கே ஓர் உலகம்’ எனும் இந்நூல் வெளிநாடு செல்லும் பயணி புறப்படுவதற்கு முன் செய்ய வேண்டிய வேலைகள், செல்லும் நாட்டில் - தங்கும் நாட்களுக்கு தேவையான ஏற்பாடுகள், அந்நியச் செலாவணி மற்றுமுள்ள முக்கிய சான்றிதழ்கள் ஆகியவையெல்லாம் சரியானபடிக்கு உள்ளதா? என்பது போன்ற குறிப்புகளிலிருந்து - வெளிநாட்டில் பார்த்தவை, மனதில் பதிந்தவை ஆகியவற்றை யெல்லாம் கதை போல பயனுள்ள வகையில் சொல்லியுள்ள பாங்கு ஆகியவை ஆசிரியர் திருமதி வாஸந்தி அவர்களுக்கு உரிய கைவந்த உத்தியாகும்.
இந்நூலில் அவர் கண்டுகளித்த ஃபீஜித் தீவுகள், பாங்காக், தாய்லாந்து, ஸிட்னி, சிங்கப்பூர், ஆகிய நாடுகளைப் பற்றியும் அங்குள்ள பெண்களின் பிரச்சினைகள், வம்சாவழி இந்தியர்களின் நிலை, அவர்களின் எதிர்காலம் என எல்லா விஷயங்களையும் அக்குவேறு ஆணிவேறாக அற்புதமாக வடித்தளித்துள்ளார்.
மைசூர் பல்கலைக்கழகப் பட்டதாரி. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரும் கூட. இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 9 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாசாரம் அரசியல் என பல்வேறு புள்ளிகளை தொட்டுச் செல்லும் அவரது கட்டுரைகளில் பல அவை வெளி வந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.
கலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு - இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எ ழுத்தாளர் மாநாட்டுக்காக, சொற்பொழிவுகளுக்காக குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர்.
பெண் சார்ந்த பிரச்சினைகளைப்பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய 'CUT OUTS, CASTE AND CINE STARS' என்ற புத்தகத்தை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
பஞ்சாப், இலங்கை , ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சினைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் - மௌனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் குறிப்பிடத் தகுந்தவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான 'ஆகாச வீடுகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.
சமீபத்தில் வாஸந்தி சிறுகதைகள்' என்ற தொகுப்பிற்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருது கிடைத்தது.
Rent Now