தனி ஆளாக நின்று ஒரு பெரிய கள்ள நோட்டுக் கும்பலைப் பிடிக்கிறார் இன்ஸ்பெக்டர் வினாயகம். அதற்காக கலெக்டர் கையால் அவார்டு பெறுகிறார்.
ஆனால் ஐந்து வருடங்களுக்குப் பிறகு, அதே கள்ள நோட்டுக் கும்பலின் அதே கள்ள நோட்டு புழக்கத்திற்கு வருகிறது.
தலையைப் பிய்த்துக் கொண்ட போலீஸ் டிபார்ட்மெண்ட் ஸ்பெஷல் ஆபீஸர் சீனிவாசனை நியமிக்கின்றது. சீனிவாசன் ஐந்து வருடங்களுக்கு முன் அந்தக் கள்ள நோட்டைத் தயாரித்தவர்களைத் தேடிப் பிடிக்கிறார். ஆனால், அவர்களில் ஓரிருவர் இறந்திருக்க, உயிரோடிருப்பவரும் நடமாட்டமில்லாது படுத்த படுக்கையாய்க் கிடக்கிறார்.
“கரப்பான் பூச்சிகளைக் கூட அழித்து விடலாம்... கள்ள நோட்டை அழிக்க முடியாது போலிருக்கே?” என்று எண்ணிக் கொண்டே தீவிரமாய்த் துப்பு துலக்குகின்றார்.
புது கள்ள நோட்டு கும்பலை அவர் கண்டுபிடிக்கும் விதத்தை அங்குலம் அங்குலமாய் நகர்த்திச் செல்கிறார் நாவலாசிரியர். படிக்கும் வாசகர்களுக்கு ஒரு திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதுதான் கதாசிரியரின் வெற்றி.
சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.
தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.
சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.
கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.
Rent Now