ஒரு ஏ.டி.எம்.சென்டரின் எந்திரம் உடைக்கப்பட்டு பணம் களவாடப்படுகின்றது. போலீஸ் வந்து அந்த ஏ.டி.எம்.அறைக்குள் தடயம் தேட, நகரின் மிகப் பிரபலமான டாக்டரான “டாக்டர். சுரேஷ் காந்த்” விசிட்டிங் கார்டு அங்கு கிடக்கிறது. போலீஸ் அதை அலட்சியம் செய்கின்றது.
கரட்டு மேடு மலைப் பகுதியில் ஒரு காதலனும் காதலியும் ஒதுங்க, யாரோ ஒருத்தன் அவர்களுக்கிடையில் புகுந்து அந்த இளைஞனைத் தாக்கி விட்டு, அந்தப் பெண்ணைக் கற்பழித்துக் கொன்று விடுகிறான். போலீஸ் வந்து அந்த இடத்தை ஆராய அங்கும் டாக்டர் சுரேஷ் காந்த் விசிட்டிங் கார்டு கிடக்கிறது.
கடைவீதியின் மத்தியிலுள்ள ஒரு மார்வாடியின் நகை அடமானக் கடைக்குள் யாரோ புகுந்து மொத்த நகைகளையும் அள்ளிக் கொண்டு சென்று விட, அங்கு வந்து தடயம் தேடிய காவல் துறையினருக்கு டாக்டர் சுரேஷ் காந்தின் விசிட்டிங் கார்டே கிடைக்கிறது.
சமூகத்தின் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் அவரை நேரடியாக விசாரிக்காமல் பிரைவேட் டிடெக்டிவ் மூலம் விசாரிக்கத் துவங்கின்றது போலீஸ்.
குற்றம் நடந்தது என்ன?
குற்றவாளி யார்?
நாவலைப் படியுங்கள்.
சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.
தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.
சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.
கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.
Rent Now