அரசு மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனைப் பிரிவில் பணி புரிபவர் அருணகிரி. சவங்களை அறுத்து பிரேதப் பரிசோதனையை டாக்டர்கள் முடித்து விட்டுச் சென்றதும், அவர்கள் வெளியே எடுத்துப் போட்ட உடலின் பாகங்களை மீண்டும் உடலுக்குள் திணித்து தையல் போடும் பணி அருணகிரிக்கு. ஒவ்வொரு முறை அந்தப் பணியை செய்யும் போதும் கூறு போடப்பட்டுக் கிடக்கும் அந்த மனித ஜீவனுக்காக கண்ணீர் சிந்துவார் அருணகிரி.
உடன் பணிபுரியும் ஆறுமுகம் அருணகிரியின் அந்தச் செயலுக்காக அவரைக் கிண்டல் செய்வான்.
இளம் வயதிலேயே மனைவியை இழந்தவரான அருணகிரி மறுமணம் செய்து கொள்ளாமல், தன் மகன் பெருமாளுக்காக தனி மரமாகவே வாழ்ந்தார். தாயில்லாப் பிள்ளை என்ற காரணத்திற்காக அவன் மீது தன் உயிரையே வைத்திருந்தார் அவர். அதே நேரம், தன் மகன் பெருமாளை அதிக செல்லம் கொடுத்து வளர்க்க அவன் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகிறான்.
ஒரு முறை, நகரில் சிறுமியொருத்தியைக் கற்பழித்த பெருமாளை காவல்துறை என்கௌண்டர் செய்து விட, அவனுடைய பிரேதப் பரிசோதனை முடிந்த பின் வழக்கம் போல் உள்ளே செல்கிறார் அருணகிரி…
அடுத்து நடந்தது என்ன?
அது நாவலுக்குள் உள்ள ரகசியம்….வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.
தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.
சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.
கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.
Rent Now