‘மழலை உலகு' என்ற தலைப்பின் கீழ் உமையவன் படைத்த சிறுவர்களுக்கான நீதிக்கதைகள் அத்தனையும் படித்தேன். ஒவ்வொரு கதைக்குப் பின்னாலும் அந்தக் கதைக்குப் பொருத்தமான குறளைத் தந்து, கதையின் நோக்கினை விளக்கி, அந்தக் குறட்பாக்களை மனதில் பதியுமாறு வரைந்த விவரம் தனித்துவம் பெற்று இருக்கின்றது.
இலக்கியப் பயணத்திலும், ஆன்மிகப் பயணத்திலும் கவிதை உலகிலும், தனது சாதனையைப் படைக்க வேண்டும் என்று துடிப்புள்ள இளமையோடு செயல்படுகின்ற உமையவனின் எழுதுகோல் முத்திரை பதிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
சிறுவர்களுக்காகப் படைத்துள்ள கதைகள் அத்தனையும் தமிழ் அன்னையின் கழுத்தில் முத்தாரமாக ஒளி விடுகின்றன. உமையவன் இன்னும் பல நூல்கள் ‘ஹைகூ’ என்னும் கவிதை வடிவிலும், தன்னம்பிக்கை நூல் ஒன்றும் படைத்துக் கொண்டிருக்கிறார் என்பது மகிழ்ச்சியான செய்தி.
அவரது பணிகள் புகழ் பாதையில் பீடு நடை போட அந்த உமையவனே அருள் தருக என வாழ்த்துகின்றேன்.
அன்புடன்
நீதியரசர் தி. நெ. வள்ளிநாயகம்
இளம் எழுத்தாளர் ப.ராமசாமி என்கிற உமையவன் சத்தியமங்கலத்திற்கு அருகில் உள்ள கெம்பநாயக்கன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். கதை, கவிதை, கட்டுரை சிறுவர் இலக்கியம், ஹைக்கூ, ஆன்மிகம், உரைநூல்கள், பதிப்பு நூல்கள் என பதினைந்து நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். எழுதுவதோடு மட்டுமின்றி கவியரங்க நடுவர், பட்டிமன்ற பேச்சாளர், கருத்தரங்கம் என இலக்கிய நிகழ்வுகளிலும் தன் முத்திரையைப் படைத்து வரும் பன்முகப் படைப்பாளி.
தமிழக அரசின் 'தமிழ் செம்மல்' விருது, கம்போடியா அரசின் உலக பாரதியார் விருது உட்பட இரண்டு அரசு விருதுகளை பெற்றுள்ளார். ரவுண்ட் டேபிள் ஆப் இந்தியா நிறுவனம் வழங்கிய "பெருமைமிகு தமிழர் விருது" (Pride of Tamilnadu - 2018) உள்ளிட்ட இருபத்தைந்திற்கும் மேற்பட்ட விருதுகளையும், பல சிறந்த நூல்களுக்கான பரிசினையும் பெற்றுள்ளார்.
சாகித்ய அகாடெமியின் சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற அகில இந்திய இளம் எழுத்தாளர்கள் சந்திப்பில் தமிழ்நாட்டின் சார்பாக பங்குகொண்ட ஒரே இளம் எழுத்தாளர். கலைஞர், மக்கள், பொதிகை. Z தமிழ் போன்ற பல்வேறு தொலைக்காட்சிகளில் இவரது நேர்காணல் ஒளிபரப்பாகியுள்ளது. அகில இந்தியா வானொலி, இணைய காணொலி போன்றவற்றிலும் பங்கு கொண்டுள்ளார்.
கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர் என பன்முக ஆற்றலாளர். இவரின் சிறுவர் நூல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கவிதைகள் கல்லூரி பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
Rent Now