'நெஞ்சுக்குள் எத்தனை கனவுகள்' என்ற இந்த நாவல். என் மகளின் நெருங்கிய தோழியின் வாழ்க்கையில் வீசிய புயலைத்தான் கருவாகக் கொண்டு எழுதியிருக்கிறேன். இந்த தலைமுறையில் பெற்றோர்கள் சுயநலமாக இருப்பதில்லை. சமுதாயத்தில் இருக்கும் போட்டிக்கு தன் குழந்தைகளை தயார் செய்வதில் எந்த தியாகத்தையும் செய்ய முன் வருகின்றனர். அப்படி ஒரு தந்தையை எதிர்பார்க்கும் கதாநாயகி இதயம் உடைந்து போகிறாள். தன் சுயநலத்தை உணர்ந்த பின் தந்தையின் நிலை என்ன? எழுதும்போதே சில இடங்களில் என் கண்கள் நிறைந்துவிட்டன. காரணம் - எந்த சூழ்நிலையிலும் நம் வாழ்க்கை என்பது நமது குழந்தைகளுக்காக மட்டுமே என்ற மாற்ற முடியாத எண்ணமே. வாசித்து விட்டு வாசகர்கள் எழுதும் கடிதங்களுக்காக காத்திருக்கும்,
அன்புடன் ஆர். சுமதி
ஆர். சுமதி என்ற எனது இயற்பெயரில் 1994 லிருந்து எழுதி வருகிறேன், என் கணவர், திரு. சௌரந்தராஜன், ஆசிரியராக பணியாற்றுகிறார். ஒரே மகள் சௌந்தர்யா பல் மருத்துவம் படித்து வருகிறார். என் சொந்த ஊர் திரு ஞானசம்பந்தர் அவதரித்த, திரு. சீர்காழி கோவிந்த ராஜனால் புகழ் பெற்ற சீர்காழி. தமிழல் எம். ஏ பட்டம், வரலாற்றின் எம். ஏ பட்டமும் பெற்றுள்ள நான் ஓவிய ஆசிரியர் பயிற்சியும் முடித்து ஓவிய ஆசிரியராக பணியாற்றுகிறேன்.
தற்சமயம் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆவார்பூர் என்னும் இடத்தில் வசித்து வருகிறேன். பலமொழி பேசும் மக்கள் மத்தியில் வாழ்வதால் இந்தியர் என்ற உணர்வை எப்பொழுதும் உணர்ந்து மகிழ்கிறேன்.
என்னுடைய முதல் நாவல் தேவியின் 'கண்மணி' வெளி வந்தது. கண்மணி நடத்திய நாவல் போட்டியில் இரண்டாம் பரிசு கிடைத்தது ஆரம்பகாலத்தில் என் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் வளர்த்தது.
என்னுடைய தமிழாசிரியர் என்னுடைய நாவலில் ஆராய்ச்சி படிப்பு முடித்தது எனக்க பெருமையை அளித்தது. மற்றும் திருச்சியை சேர்ந்த மாணவர் இருவர் என் நாவலை ஆராய்ச்சி படிப்புக்கு எடுத்துக் கொண்டு எம்ஃபில் பட்டம் பெற்றுள்ளனர்.
புஸ்தகா நிறுவனத்திலிருந்து என்னுடைய நூல்கள் வெளி வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி, எழுத்தும் ஓவிய ஆசிரியர் பணியும் தரும் திருப்தியுடன்,
உங்கள்
ஆர். சுமதி
Rent Now