கதையின் நாயகன் : நகுலன்.
கதையின் நாயகி : அனன்யா.
வாழ்க்கையில் நாம் எத்தனையோ எதிர்பாராத சந்திப்புக்களை, நிகழ்வுகளை சந்திக்கிறோம். அப்படி ஒரு சந்திப்பில் நாயகியை சந்திக்கும் நம் நாயகன், அவள் அறியாமலேயே அவள்மேல் காதல் கொள்ள,
தன்னை ஒருவன் தனக்குத் தெரியாமலேயே காதலிப்பதை அறியாமல், தன்னிடம் காதல் சொன்ன வேந்தனுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நாயகி கொடுத்த வாக்கு..., அதைக் காக்க போராடும் அவள் நிலை...
கழுத்தில் தாலி ஏறிய பிறகு..., கொடுத்த வாக்கா..., கட்டிய தாலியா? என்ற உணர்வில் அவள் போராட..., தன் கனவு மெய்யான பிறகும், அது நிஜத்தில் கனவாகிப் போன நிலையில் போராடும் நகுல்..., தன் காதலை அவளுக்கு உணர்த்தினானா?
இல்லையென்றால்...., தன் காதல் மனைவியை, அவள் கொடுத்த வாக்குக்கு இணங்க, அவள் காதலனோடு சேர்த்து வைத்தானா? அவன் கனவு நிஜமானதா? இல்லையென்றால் நிஜத்தில் கனவாகியே போனதா? விடை அறிந்துகொள்ள, என்னோடு பயணப்படுங்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்தை, எங்கள் ஊரில் இருந்த நூலகம், நாவல் பக்கம் திருப்பியது.
கல்லூரிப் படிப்பு, வேலை, திருமணம் என என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், புத்தகம் எனக்கு உற்ற தோழியாக இருந்தது மட்டும் உண்மை. ஒரு கட்டத்தில், எனக்குள் இருந்த எழுத்தார்வம் தலை தூக்க, என் வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்போடு என் எழுத்துப் பயணம் இனிதே துவங்கியது.
இப்பொழுதுதான் துவங்கியதுபோல் இருந்த என் எழுத்துப் பயணத்தில்..., ஒவ்வொரு கதையையும் என் முதல் கதையாகவே கருதி எழுதுகிறேன். ஒவ்வொரு கதையின் கருவை தேர்ந்தெடுப்பதும், அதை சுற்றிய என் கற்பனையை விரிவு படுத்துவதிலும், ஒரு தனி கவனம் செலுத்தியே என் படைப்புக்களை படைக்கின்றேன்.
என் வாசிப்பு ரசனை எப்பொழுதும் பொழுதுபோக்கு சார்ந்ததாகவே இருக்கும். எனவே என் படைப்புக்களும் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாகவே இருக்கும்.
புத்தக வடிவில் உரு மாறிய என் கதைகள், அடுத்த கட்டமாக மின்நூல்களாக உங்கள் வீட்டுக்கு வருவதை எண்ணி மிகுந்த சந்தோஷமடைகிறேன். ‘புஸ்தக்’ நிறுவனத்தோடான என் பயணம் இனிமையாக இருக்கும் என எண்ணுகிறேன்.
என் படைப்புக்களை வாசிக்கும் நீங்களும், உங்கள் கருத்துக்கள், நிறைகள், குறைகள் என அனைத்தையும் என் infastories@gmail.com என்ற முகவரிக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக காத்திருக்கிறேன்.