பொதுவாகவே, ஒரு புத்தகம் தனது முதல் வெற்றியைப் பெறுவது அதன் தலைப்பில்தான். சில புத்தகங்கள் தன் அருமையான தலைப்பிற்காக, வாங்கப்பட்டு... வாசிக்கப்படுகின்றன. அந்த வகையில் கவித்துவமான ஒரு தலைப்பினை இச்சிறுகதைத் தொகுப்பிற்கு வைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில வைக்கப்பட்ட தலைப்புத்தான் “பூக்களின் மொழி புரியலையே!”.
குடும்பக் கதைகளும், சமூகக் கதைகளும் அதிகம் இடப் பெற்றிருக்கும் இத்தொகுப்பில் காதல் கதைகளும் உண்டு. ஆனாலும், இந்தக் காதல் கதைகளின் பின்புலத்தில் ஒரு வாழ்க்கைத் தத்துவம் பொதிந்திருப்பதை ஆழ்ந்து படித்தால் மட்டுமே உணர முடியும்.
தத்துவக் கருத்துக்களையும், உளவியல் உண்மைகளையும் சிறுகதைகளின் மூலமாகவும் வாசகர்களுக்குக் கொடுக்க முடியும், என்பதற்கு எடுத்துக்காட்டு இத்தொகுப்பு.
இதிலுள்ள கதைகள் யாருக்கும் எந்த விதத்திலும் மன நெருடலைத் தராது என் உறுதியளிக்கும் விதத்திலானவை.
- முகில் தினகரன்
சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.
தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.
சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.
கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.
Rent Now