கொங்கு மண்டலத்தின் சத்தியமங்கலத்திற்கு அருகே உள்ள ஓர் அழகிய கிராமம் கெம்பநாயக்கன்பாளையம். இந்தப் பேரூராட்சியின் ஒரு பகுதி கொருமடுவு என வழங்குகிறது. இங்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில் கொண்டுள்ளார். இத்திருக்கோயிலுள் விநாயகர், சிவபெருமான், பார்வதி, பைரவர், ஒன்பான் கோள்கள், சண்டிகேசுவரர், திருமால், திருமகள், பிரமன், பிராம்மி, சரசுவதி, தட்சிணாமூர்த்தி ஆகிய கடவுள்களின் சன்னதிகளோடு கொங்கு குலதெய்வங்களில் சிறப்பு வாய்ந்த செல்லாண்டி அம்மனுக்கும், பிதுர் தேவர்களுக்கும் தனித்தனியாகச் சன்னதிகள் அமைந்துள்ளன.
இந்த ஆலயத்தைப் பற்றிய செய்திகளை விளக்குவதோடு இங்கு சிறப்பாக நடைபெறும் சுயம்வரா வேள்வியைப் பற்றியும் ஆசிரியர் உமையவன் அவர்கள் நன்கு விவரித்துள்ளார். இந்த நூலில் ஆலய வழிபாட்டின் அவசியமும், ஒன்பான் கோள்கள் பற்றிய செய்திகளும், தோத்திரப் பாடல்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
திருமணத்தடை நீக்கும் தெய்வீகத் திருத்தலம் என்னும் இந்தத் தலவரலாற்று நூலைத் திரு. உமையவன் அனைவரும் பயன்படுமாறு எழுதி வெளியிட்டுள்ளார். இந்த நூலாசிரியரைப் பாராட்டி வாழ்த்துகிறோம். பொதுமக்கள் அனைவரும் தல வழிபாட்டில் ஈடுபட்டு இறையருளைப் பெற்று நன்கு வாழ இத்தகைய நூல்கள் பேருதவி புரியும்.
ஆசிரியர் உமையவன் அவர்களின் இத்தகைய பணி தொடர்ந்து சிறப்படைய வாழ்த்துகள்.
அன்புடன்
குமரகுருபர சுவாமிகள்
இளம் எழுத்தாளர் ப.ராமசாமி என்கிற உமையவன் சத்தியமங்கலத்திற்கு அருகில் உள்ள கெம்பநாயக்கன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். கதை, கவிதை, கட்டுரை சிறுவர் இலக்கியம், ஹைக்கூ, ஆன்மிகம், உரைநூல்கள், பதிப்பு நூல்கள் என பதினைந்து நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். எழுதுவதோடு மட்டுமின்றி கவியரங்க நடுவர், பட்டிமன்ற பேச்சாளர், கருத்தரங்கம் என இலக்கிய நிகழ்வுகளிலும் தன் முத்திரையைப் படைத்து வரும் பன்முகப் படைப்பாளி.
தமிழக அரசின் 'தமிழ் செம்மல்' விருது, கம்போடியா அரசின் உலக பாரதியார் விருது உட்பட இரண்டு அரசு விருதுகளை பெற்றுள்ளார். ரவுண்ட் டேபிள் ஆப் இந்தியா நிறுவனம் வழங்கிய "பெருமைமிகு தமிழர் விருது" (Pride of Tamilnadu - 2018) உள்ளிட்ட இருபத்தைந்திற்கும் மேற்பட்ட விருதுகளையும், பல சிறந்த நூல்களுக்கான பரிசினையும் பெற்றுள்ளார்.
சாகித்ய அகாடெமியின் சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற அகில இந்திய இளம் எழுத்தாளர்கள் சந்திப்பில் தமிழ்நாட்டின் சார்பாக பங்குகொண்ட ஒரே இளம் எழுத்தாளர். கலைஞர், மக்கள், பொதிகை. Z தமிழ் போன்ற பல்வேறு தொலைக்காட்சிகளில் இவரது நேர்காணல் ஒளிபரப்பாகியுள்ளது. அகில இந்தியா வானொலி, இணைய காணொலி போன்றவற்றிலும் பங்கு கொண்டுள்ளார்.
கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர் என பன்முக ஆற்றலாளர். இவரின் சிறுவர் நூல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கவிதைகள் கல்லூரி பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
Rent Now