சுந்தரவடிவேலுவும், அவர் மனைவி புவனேஸ்வரியும் அந்தக் கிராமத்திற்கு நன்மைகளையே நினைக்கும் மூத்த தம்பதியினர். அந்த கிராமத்தில் சினிமா கொட்டகை இல்லாத காரணத்தால் அவ்வூர் மக்கள் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பக்கத்து கிராமத்திற்குச் சென்று சினிமா பார்த்து வர, மக்களின் அக்குறையைத் தீர்க்க படாத பாடு பட்டு அவ்வூருக்கு ஒரு சினிமா கொட்டகை கொண்டு வருகிறார் சுந்தரவடிவேலு. மேலும் அந்தக் கொட்டகையில் நல்ல நல்ல படங்களைப் போட்டு அவ்வூர் மக்களை நன்மக்களாகவே வைத்திருக்கின்றார். ஆனால். அவருக்குப் பிறகு வந்த அவரது மகன், மோசமான...தரமற்ற...ஆபாச படங்களைப் போட்டு மக்களின் மனதைக் கெடுக்க, சுந்தரவடிவேலுவின் மனைவியான புவனேஸ்வரி ஒரு அதிரடியான முடிவெடுத்து அந்தப் பிரச்சினையை முடிக்கிறார்.
சமூக அக்கறையை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் இந்தக் கதையில் பல வாழ்க்கைத் தத்துவங்களை ஆங்காங்க பதித்து, வாசக நெஞ்சங்களை செம்மைப்படுத்துகிறார் ஆசிரியர்.
சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.
தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.
சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.
கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.
Rent Now