Mukil Dinakaran
வளரும் எழுத்தாளன் சீனிவாசன், ஒரு பதிப்பகத்தாரைப் பார்க்க தன்னுடைய படைப்புக்களையெல்லாம் ஒரு பெரிய சூட்கேஸில் அடைத்துக் கொண்டு மைசூர் பஸ்ஸில் ஏறுகிறான்.
இரவுப் பயணத்தில் பஸ் ஒரு தேநீர் விடுதியில் நிற்க, அந்த விடுதிக்குப் பின்னால் இயற்கை உபாதைக்காக சென்ற சீனிவாசன் அங்கிருந்த கிணற்றில் விழுந்து விடுகிறான்.
அதைக் கண்டு கொள்ளாமல் புறப்பட்ட பேருந்து மைசூரை அடைந்ததும், சீனிவாசனின் பக்கத்து சீட் காரன் சீனிவாசனின் பெரிய சூட்கேஸை எடுத்துக் கொண்டு போகிறான்.
பெரிய ஆசையுடன் அதை திறந்து பார்த்தவன் ஒரே காகிதங்களாய் இருக்க சலிப்பாகிறான். ஆனால், அவற்றின் பயனைக் கொஞ்சம் கொஞ்சமாய் தெரிந்து கொண்டதும் சீனிவாசன் படைப்புக்களை தன் பெயரில் வெளியிட்டு பிரபலமாகிறான். வெறும் “குமார்” எழுத்தாளர் “ரோஜாக் குமார்” ஆகின்றான்.
அவன் பெயரில் வெளியான படைப்புக்கள் அனைத்தும் தன் காதலன் சீனிவாசனுடையது என்று அடையாளம் கண்டு கொண்ட நந்தினி குமாரைத் தேடி வருகிறாள்…
மீதி… நாவலுக்குள்….
சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.
தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.
சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.
கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.