Mukil Dinakaran
முதிர் கன்னி ஆகியும் இன்னும் திருமணம் ஆகாத சுமதி பல நேரங்களில் பல விதங்களில் காயப்படுகிறாள். அலுவலகத்தில் அவள் மேனேஜர் இரட்டை அர்த்தத்தில் பேசி அவளை வளைக்கத் துடிக்கிறார். அவள் கழுத்தில் ஒரு தாலி ஏறினால் போதும் என்கிற லட்சியத்தோடு அவள் தந்தையும், தரகரும் அலைவதைப் பார்க்கும் போதெல்லாம் அவள் மனம் மௌனமாய் அழும்.
யாருடனும் பேசப் பிடிக்காதவளாய் தனி வாழ்க்கை வாழ்ந்த சுமதி, நூலகத்தில் தான் படித்த “ஆவியுலக தொடர்பு” புத்தகத்தில் உள்ளவைகளை சோதனை செய்து பார்க்கையில், லட்சுமிநரசிம்மன் என்னும் மனிதரின் ஆவி அவளுக்கு நட்பாகிறது….
வாழும் காலத்தில் ஒரு ராசியான கல்யாணத் தரகராய் வாழ்ந்து முடித்த அந்த ஆவி, சுமதியின் துயர் கண்டு மன வருந்தி, அவளுக்கொரு கல்யாணம் செய்து வைக்க முடிவெடுக்கின்றது.
ஒரு ஆவியால் ஒரு திருமணத்தை நடத்தி வைக்க முடியுமா?
நாவலைப் படியுங்கள்….
சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.
தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.
சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.
கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.