உறவுகள் தொடர்கதை நாவல் உழைத்து முன்னேறும் பெண்களுக்கு உற்சாகம் கொடுத்திடும் ஒரு டானிக். இக்கதையின் நாயகி சாலினி பஸ் கண்டக்டரை காதலித்து கல்யாணம் செய்துக் கொண்டதால், தந்தையும், தாயும் இவளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஊரை விட்டு ஓடி விட்டாலும் கைப்பிடித்த காதலனுடன் வாழ்ந்து, தாயிடம் கற்றுக் கொண்ட உழைப்பின் அனுபவத்தை பயன்படுத்தி உயர்நிலையை அடைகிறாள். குறுகிய கால வாழ்க்கையில் கணவனை மரணம் தழுவினாலும் பெற்ற மகனை பேணிக்காத்து, கணவனை கண்ணால் காணும் ஜீவனாக மகனை வளர்த்து தன் திறமையினால் அவனை உயர்ந்த நிலைக்கு உயர்த்தி தன் சகோதரனின் மகளையே மருமகளாக்கி உறவுகள் தொடர்கதையாக கொண்டு செல்வதே கதையின் மூலக்கரு. இடையில் ஏற்படும் இன்பம், துன்பம், ஏற்றத்தாழ்வுகளை தொய்வின்றி சுவாரஸ்மாகக் கொண்டு செல்வதே இக்கதையாசிரியரின் கைவண்ணம்.
திருமதி லட்சுமி ராஜரத்னம் திருச்சி நகரில் 27.3.1942ல் பிறந்தார் பத்தாவது வயதில் திருப்பாவை, திருவெம்பாவை போட்டியில் தங்க நாணயம் பரிசு பெற்றார்.
இதுவரை 1500 சிறுகதைகள், நிறைய நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், 15 சென்னை தொலைகாட்சி நாடகங்கள், 3 மெகா தொலைகாட்சித் தொடர்கள், 3500 க்கும் மேற்பட்ட ஆன்மீகக் கட்டுரைகள் இவரின் எழுத்துலகச் சாதனைகளாகும். 40 சரித்திரச் சிறுகதைகள் எழுதிய பெண் எழுத்தாளரும் இவரே.
காஞ்சி சங்கர மடத்தினால் 1991ல் எழுத்துக்காகவும், 1993ல் ஆன்மீகச் சொற்பொழிவிற்காகவும் கௌர விக்கப்பட்டுள்ளார். இதுவரை 2500 சொற்பொழிகள் செய்துள்ளார். திருவையாறு தியாகராஜ ஆராதனையில் சின்ன கச்சேரி செய்த அனுபவம் உண்டு. இதைத் தவிர கோயம்புத்தூர், தஞ்சையில் கச்சேரிகள் செய்த அனுபவமும் உண்டு. மகள் ராஜஸ்யாமளாவின் நாட்டியற்குப் பாடிய அனுபவமும் உண்டு.
இவருடைய இதயக்கோயில் நாவல் கலைமகள் நாராயணஸ்வாமி ஐயர் பரிசு பெற்ற நாவல். இன்று வரை பலரால் பாராட்டைப் பெற்ற நாவல்.
1999ல் 'செந்தமிழ்ச் செல்வி' என்று ஸ்ரீகுக ஸ்ரீ வாரியார் விருதைப் பெற்றார். ஜனவரி 2002ல் கொழும்புவில் உள்ள இந்து மகா சபை இவருக்கு சொற்சுவை நாயகி என்ற விருதைக் கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது. சங்கப்பலகை என்னும் புகழ் பெற்ற கலைமகள் பத்திரிக்கை ஜனவரி 2019-ல் சிறந்த எழுத்தாளருக்கான விருதை கொடுத்து கௌரவித்தது. ஒரே மகள் ராஜஸ்யாமளாவும் எழுத்தாளர் பரத நாட்டியக் கலைஞர்.
2011-ல் கணவனை இழந்த இவர் அதன்பின் உடல் நலம் குன்றி நான்கு அறுவை சிகிச்சைகள், இன்னும் பல உடல் தொந்திரவுகள் என்று சிரமப்பட்டாலும் 76 வயதிலும் மனம் தளர்வுளராமல் எழுதி வருகிறார். உங்கள் பாராட்டு என்ற பெரிய விருதை விட பெரிய உண்டா? என்கிறார்.
Rent Now